பிடுங்கக் கிடைக்காத ஆணி

Filed under , by Prabhu on 6/15/2009 09:46:00 PM

2

இந்த பொருளாதார வீழ்ச்சியில வேலையே குதிரைக் கொம்பா இருக்கு. எல்லா இடத்துலயும் மிரண்டு போய் கிடக்கானுங்க. எல்லாரும் பெரிய உழைப்பாளி ஆயிட்டாங்க. லீவு போடுறதில்ல், ஒரே ஆணிதான். வேலைப் பார்க்காமல் சும்மா இருப்பதில்லை. ஆணியில்லாமலே பல இடங்களில் ஆணி பிடுங்கிட்டிருக்காங்க. அது எப்படின்னு கேட்டீங்கன்னா, ஒரு ஆணி புடுங்கறது, அப்புறம் இத இப்படி பிடுங்காம அப்படி பிடுங்களாமே என அவர்களே திரும்ப பிடுங்குறது(இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளயுமா அலையனும்!). இந்த மாதிரி பல வகையில அல்லாடுறாங்க.



இதவிட கொடுமையானது வேலை தேடுபவர்களின் நிலை. வேலை எங்க இருக்கு? ஒருத்தருக்கும் வேலை கிடைப்பதில்லை. பொதுவாக இம்மாதிரியான நிலை 70களில் இருந்திருப்பதாக அறிய முடிகிறது. அந்த நேரத்தில் பட்டத்தாரிகளுக்கு வேலை கிடைக்காத நிலை இருந்தது. அதை நீங்கள் அந்த காலகட்டத்துப் படங்களிலேயே அறிய இயலும். பாக்யராஜோ,வேறு எந்த கதாநாயகனோ, ஒரு நேர்முகத் தேர்வுக்கு செல்வார். அங்கே அவரது வெளிப்பாடும் நன்றாகத்தான் இருக்கும். அவரை மேனேஜர்(மேனேஜரா வேலைக்கு ஆள் எடுப்பாங்க? இது படம்தான!) பாராட்டக்கூட செய்வார். அப்பொழுது ஒரு கால் வந்ததும்(நடந்து வருமான்னு கேக்காதீங்க) அவர் முகம் சுருங்கி விடும். உடனே ஹீரோ,"என்ன சார் ஒரு பெரிய ஆள் வேற ஒருத்தருக்கு சிபாரிசு பண்ணிருக்கார். அதனால அந்த வேலைய அவருக்கு தரப் போறீங்க, அதானே", எனக் கூறி வெளியே சென்றுவிடுவார். இந்தக் காட்சி அப்போதைய படங்களில் ஒரு cliche. இப்போ புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதோடு அப்போதைய இளைஞர்களிடம் ஒரு தார்மீகக் கோபம் இருந்தது. இன்றோ நாம் சுரணையற்று இருக்கிறோம். அந்த மாதிரியாகவே படங்களின் ஹீரோக்களும் அந்த காலத்தில் கோபம் கொள்பவராக இருந்திருக்கிறார். அமிதாப்பை பார்த்தால் எப்போதும் அந்த மாதிரி கேரக்டர்களில் நடித்திருப்பார். 'Angry young man' கான்செப்ட்க்கு உருவம் குடுத்ததே அவர்தான். நிறைய படங்களில் பலரும் அவ்வாறு நடித்திருப்பார்கள், அப்பொழுது. ஒரு அநியாயம் நடந்தால் அங்கே தட்டிக் கேட்க ஹீரோ வருவார். இது ஒரு வகையில் அந்த காலத்திய இளைஞர்களை பிரதிபலித்தது. அந்த காலத்தில் நடந்த ஸ்டிரைக்குகளின் எண்ணிக்கை இதற்கு உதாரணம்.

இதே மாதிரி நிலைமை இப்போது இருந்தாலு மக்கள் ஒரு விழிப்புணர்வும் இல்லாம்ல் இருக்கிறார்கள். நமது அரசோ சொட்டையான பல பொருளாதாரத் திட்டங்களை போட்டுக் கொண்டு இருக்கிறது. போன வருடம் 39 ரூபாய் இருந்த அமெரிக்க டாலர் இந்த வருடம் 49 டாலர். இத்தனைக்கும் அமெரிக்காவும் சமாளிக்க இயலாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது. இப்போ இதுக்கு காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க. இங்க இருக்கிற பொருளையே வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? கஷ்டப்படுவது என்னவோ சாதாரண மனிதன். ஏழைக்கு என்றைக்குமே கவலைதான். பணக்காரனுக்கோ பிழைப்புக்காக கவலை இல்லை. ஆனால் நடுத்தரக் குடிமகன் பாடு திண்டாட்டம்தான். அதற்காக அவர்களுக்கு பேரிழப்பு எனக் கூறவில்லை. ஆனால் சாவை விட, தொடரும் சாவு பயம் கொடுமையானது!



இப்போ எனது அண்ணன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எந்த நெருக்கடியோ, ஆட்குறைப்போ இல்லை. ஆனாலும் அங்கே அனைவரும் ஒரு பயத்தில்தான் வேலை பார்க்கின்றனர். தாங்கள் இல்லாமல் நிறுவனம் இயங்குமென்பதை உணராமல் இருக்க வேண்டுமென, ஏதோ மற்றவர்களால் பிடுங்க இயலாத ஆணியை பிடுங்குவது, அடுத்தவன் பிடுங்கிய ஆணியை தான் பிடுங்கியதாய் கூறுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒரு வகையில் மனிதர்களின் பத்திரமில்லாத சூழ்நிலைக்கும், அவர்களை பற்பல தவறான செயல்களுக்கும் இட்டுச் செல்கிறது. குற்றங்களை நாட்டில் அதிகரிக்கச் செய்கிறது. 'சோம்பேறியின் மூளை சாத்தானின் பட்டறை' என்ற பழமொழி கேள்விபட்டிருக்கிறீர்களா? சுப்பிரமணியபுரம் படத்தில இதப் பாத்திருக்க முடியும்.

பல பேர் நிலைமை இத விட பரிதாபமா இருக்கு. ஏசில வேலை பார்த்த ஒருவர் இப்பொழுது அதே அலுவலகத்தில் ஃபேனின் அடியில் வேலை செய்கிறார். பல பேருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிற நேரத்தில், வேலை போன மறுநாளே அதுவரைக்கும் கூடப் பிறக்காத தம்பின்னு கூபிடுற வீட்டுக்காரர், உங்கள அன்பான கஸ்(ஷ்)டமரா நினைக்கிற கடன் கொடுத்த பேங்க், வாரிக் கடன் கொடுத்த கடன் அட்டை புண்ணியவான்களுக்கெல்லாம் ஒரே நாளில் புழுவாகிப் போய்விடுகிறீர்கள். Maytas(satyam திருப்பி போட்டுப் பாருங்க!)ல் வேலை செய்யும் என் கஸினை ஃபாரின் அனுப்பி வைத்த இரண்டு நாளில் சத்யம்(பேர முதல மாத்துங்கய்யா!) ஃப்ராடு ரிலீஸ்(இது சினிமாவா,ரிலீஸ் பண்ண) ஆனது. அவன் அங்க கத்தாரில் வயித்த புடிச்சிட்டு உக்காந்திருக்கான்.



இதெல்லாம் பரவாயில்லை. என் நண்பனுக்கு ஒரு வேலை கிடைத்தது, கேம்பஸ் இண்டர்வியுவில். அடுத்த கட்ட இண்டர்வியுவுக்கு முன் அவர்களுக்கு ஒரு புராஜக்ட்(அவர்கள் புராடக்ட்) செய்து கொண்டு வர வேண்டுமாம்(டேய், வேலையே இன்னும் கொடுக்கலடா!). அப்புறமும் இண்டர்வியு வைத்து வடிகட்டுவார்களாம். இந்த recessionல வேலை கிடைக்கிறதே கஷ்டம்டானு அந்த புராஜக்டுக்கும் தயாராகிட்டான். இதை கேட்டதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு சர்தார்ஜி இண்டர்வியுவுக்கு சென்றார்.அது ஒரு துப்பறியும் நிறுவனம்.

"வேலைக்கு தயாரா?" எனக் கேட்டார் அதிகாரி.
"தயார்" என்றார் சர்தார்.
"இது துப்பறியும் நிறுவனம். அதிக வேலை இருக்கும். ரொம்ப கூர்மையா இருக்கனும்"
"கண்டிப்பாக இருப்பேன்"
"சரி, இப்போ சொல்லு, காந்திய சுட்டது யாரு?".
உடனே எழுந்து அட்டென்ஷனில் நின்ற சர்தார்,
"ரொம்ப தாங்க்ஸ், வேலையில் சேத்துக்கிட்டதுக்கு. எப்படியும் 30 நாளுக்குள்ள கண்டுபுடிச்சிடறேன் சார்"

Comments Posted (2)

hahah,that sardaaji joke was damn nice. haha:)

thanx....

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!