Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

சில பயணங்கள் - 5

Filed under , , by Prabhu on 3/09/2010 08:05:00 AM

5

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4


பொங்கலுக்குப் பிறகே இரண்டு முறை பெங்களூர் சென்றுவிட்டேன். சினிமா பற்றி சிறிதாக முதல் பதிவில் பேசியிருந்தேன். சினிமா பற்றி மீண்டும் தொடருவோம். மதுரைக்காரன் - சினிமாப் பைத்தியம் என என் ஊருக்கு பட்டம் கட்ட முயற்சி வேண்டாம். பெங்களூரின் ஆச்சரியம் என்ன வென்றால் கன்னட படம் ரிலீஸாவது தெரியவில்லை. ஆனால் தமிழ் படம் ஜோராக ரிலீஸ் ஆகிறது. நான் பொங்கலுக்கு போன பொழுது ஊர் முழுக்க , ;குட்டி’, ‘கோவா’ பட போஸ்டர்கள் தான். அந்தப் படங்களுக்கும் பொதுவாக ஒட்டப் படும் போஸ்டர்கள் தவிர எங்கள் ஊரில் பல காலங்களுக்கு முன் ஒழிந்த மல்டிகலர் போஸ்டர்களும் ஒட்டுகிறார்கள். இது அஜய் அவன் சோனி செல் பேசியில் பிடித்தது.

இன்னுமா?

கன்னட படங்களைப் பற்றி பேசவில்லை என்றால் எப்படி? கன்னட பட ஹீரோக்கள் கவர்ச்சியாக இல்லை. ‘முங்காரு மலே’ கணேஷ் ஓ.கே என என் அண்ணன் சொல்வான். கன்னட பட போஸ்டர்கள் மிக அரிது. சமீபத்தில் போன பொழுது ‘ஆப்த ரக்‌ஷகா’ ரிலீஸ். விஷ்ணுவர்தன் கடைசியாக நடித்த படம். பாவம், போஸ்ட் புரொடக்‌ஷன் சமயத்தில் இறந்து போனார். ’ஆப்த மித்ரா’(சந்திரமுகி) வின் இரண்டாம் பாகம் எனப்  பரபரப்பாக பேசப்பட்ட படம். பண்பலையில் ‘விஷ்ணு வர்த்தன், விமலா ராமன் போன்றோர் நடித்த ஆப்த ரக்‌ஷகா’, ‘சூப்பர்ஹிட் பாடல்கள் கொண்ட படம் ஆப்த ரக்‌ஷகா’ என ’வாங்கிவிட்டீர்களா’ ரக விளம்பரங்களைப் போல கூவி விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் அந்த விளம்பரங்கள் நம் ஊரோடு ஒப்பிடும் பொழுது பத்தாண்டுகள் பின்னாடி இருந்தன போல் இருந்தது.


’நீ  ஒரு வயசா இருக்கும்போது பெங்களூர் முழுக்க சுத்திப் பார்த்தோம்’ என என் அம்மா சொல்வாங்க. எனக்கு நினைவிலில்லை. நான் விவரம் தெரிந்து நான்கு வருடம் முன் தான் பெங்களூர் சென்றேன். அப்பொழுது என் அண்ணன், அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். ஒருவன் காலையில் எழுந்ததும் மணி அடித்து சாமி கும்பிடும் அளவு பக்தி பழம். இன்னொருவன் அப்பொழுதே இரண்டு செல்பேசிகள் வைத்துக் கொண்டு செல்பேசியின் ஸ்பீக்கர் வலிக்கும் வரை பேசுவான்; எந்நேரமும் ‘ஹி.. ஹி..’ என ஃபோனில் ஒரு சிரிப்பு; எப்படி பாஸ் இவ்வளவு நேரம் கடலை போடுறீங்க?

அவர்களுடன் BTM Layout  செல்லும் வழியில் ஏதோ தியேட்டரில் ஷகீலா படம் ஓடியது. அதில் ஆச்சரியம் என்னவென்கிறீர்களா. அந்த பக்திப் பழம் சொன்ன தகவல் தான் ஆச்சரியம். அந்த ஷகீலா படம் நூறு நாள் ஓடி குத்து விளக்கு ஏற்றிக் கொண்டாடியிருக்கின்றனர் பெங்களூர் தியேட்டர் பெருமக்கள். கேரளாவிற்கு பிறகு இந்தியாவிலேயே அதிக அளவிலான கவர்ச்சி படங்கள் வெளியாகும் மாநிலம் கர்நாடகாதானாம். ரொம்ப starvation போல. அதே போல நான் முதலில் பெங்களூரு சென்ற பொழுது ஊர் முழுக்க ஒரே நமீதா காய்ச்சல். நமீதா அப்போ தான் கன்னட எண்ட்ரி. ஹீரோ ஏதோ டி.ஆர்., மாதிரியான நடிப்பு மற்றும் இயக்கம் கேஸ் போல. கன்னட சினிமான்னு சொல்லிட்டு எனக்கு பிடிச்ச நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ என சொல்லாமல் போனா என் மனது சாந்தி அடையாது.

என் பெங்களூர் சினிமா அனுபவம் PVR cinemas பற்றி சொல்லாமல் முழுமை அடையாது. நான் 'Pirates of the Carribean Sea - At the world's end' அங்குதான் பார்த்தேன். படம் முழுக்க புயல் மழையென இருக்க, ஏதோ தியேட்டரில் என் பிடறிக்குப் பின்னால் நீர் விழுவது போலாக ஒலி அமைப்பு மிரட்டலாக இருந்தது தியேட்டரில். இந்திய அளவிலான இந்த திரையரங்கு சங்கிலி பெங்களூரில் Forumன் மூணாவது மாடியில் உள்ளது. அந்த மூணாவது மாடியிலேயே 11 ஸ்கிரீன் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் போன பொழுது அமிதாப் நடித்த 'Rann’ பார்த்தேன். வழக்கமான ஒரு நல்ல RGV படம். அந்தத் தியேட்டரில் மொக்க படம் பார்த்தால் கூட சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோணியது. இதே தியேட்டருகில் காலேஜ் முயற்சி செய்து, ஆனால் அதே காலேஜின் வேறு கேம்பஸ் கிடைத்த சோகம் எனக்கு. ம்ஹூம்.

கன்னடத்தில் பெங்களூர் என்று வைத்து விட்டார்கள். நியாயமாக தமிழில் ’பெண்களூர்’ என்று வைத்திருக்க வேண்டும். கொடைக்கானலுக்கு பிறகு இயற்கையை வியந்த இடம் பெங்களூர் தான்.

இப்படியாக இந்தப் பயணத் தொடர் நிறைவடைகிறது. சுபம்!

சில பயணங்கள் - 4

Filed under , by Prabhu on 3/06/2010 09:37:00 AM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
Forumல் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான் : உணவு, பெண்கள். இரண்டிற்குமான ஒற்றுமையை நான் சொன்னால் ஆபாசமாகிவிடுமென்பதால் விட்டுவிடுவோம். அங்கே எல்லோரும் மிகச் சுதந்திரமாக இருக்கிறார்கள். பொதுவாகவே சாலையில் பெண்கள் ஆண்கள் கைகளைப் பிடித்து செல்வது சகஜமாகவே இருக்கிறது. அங்கே ஷோகேசில் ஒரு பொம்மை இருந்தது. ஆனால் குட்டையாக, கொஞ்ச அதிகமான சதைப்பிடிப்புடன் யாரு ஷோகேஸ் பொம்மை செய்கிறார் என யோசிக்கும் நேரத்தில்தான் தெரிந்தது அது ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்று. ஏன் இப்படி கண்ணாடிகிட்ட நின்று குழப்புகிறாள்? இந்த ஊருக்கு எந்த எந்த ஊரில் இருந்தெல்லாம் வருகிறார்களென இங்கு தெரிகிறது. வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. அல்லது அவர்களுடைய ‘சங்கி மங்கி’ தன மூஞ்சி காட்டிக் கொடுக்கிறதோ என்னவோ.
மெக் டொனால்ட் - சீச்சீ புளிக்கும்...
PVR Cinemasன் 11 திரையரங்குகள் மூன்றாவது மாடியில் இருக்கிறன. அவற்றைப் பற்றி வேறு ஒரு பதிவில் எழுதி வைத்திருக்கிறேன். பிறகு வெளியிடுகிறேன். MCDonald burger(பாலாவின்Food Inc., பதிவு படித்திருந்தால் இது நடந்திருக்காது) உடன் கிளம்பும் நேரத்தில் Landmark நினைவிற்கு வந்தது. அங்கே சென்று புத்தகங்கள் இருக்கும் பகுதியில் ஒரு ஒரு மணிநேரம் செலவானது. ராமானுஜன் என்று ஒருத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், தேடின பொழுது கைக்காசு இடித்ததால், தாகூர் ‘கீதாஞ்சலி’யில் அப்படி என்ன எழுதியிருக்கிறார் எனப் பார்க்க வாங்கினேன். ஆனாலும் ராமானுஜன் புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து சிறிது தேய்த்துவிட்டுதான் வந்தேன். Sachin Garg என ஒருவர் எழுதிய ‘A sunny shady life' எடுத்தேன். சேத்தனின் FPS ரகத்தில் எழுதியிருப்பார் போல. படித்துவிட்டு சொல்கிறேன். 

K.R.Marketஅருகே ஒரு மசூதி
K.R.Market என்று ஒரு ஏரியா பெங்களூரில் இருக்கிறது. கோரமங்களாவில் இருந்து 340 வரிசையில் பல பஸ்கள் Forum வழியாக மார்க்கெட் செல்கிறது. மார்க்கெட் பகுதியை பார்க்கும் பொழுது இதுதான் பழைய பெங்களூரோ எனத் தோன்றுகிறது. அந்த வீதிகளைக் காணும் பொழுது இப்பொழுது பெங்களூரில் இருக்கும் அந்த வெளிநாட்டுத்தனம் சிறிதும் இல்லாத ஒரு சாதாரண இந்தியக் கடைத்தெரு போன்று இருக்கிறது. எனக்கு அந்தக் கடைத்தெருவைப் பார்த்ததும் மதுரை டவுன்ஹால் ரோடு போன்று இருந்தது. பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்து மதுரையை சிறிதே மறந்துவிட்டவனைக் கொண்டு வந்து நிறுத்தி டவுன்ஹால் ரோடு என்று சொன்னால் சிறிது நேரத்திற்கு நம்பியே விடுவான் போலிருந்தது எனக்கு. உள்ளே நடக்கும் பொழுது என் சொந்த ஊரில் நடப்பது போல உரிமையுடன் நடந்தேன். அங்கே இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எழுதிய, ' The Goal’ என்ற மேலாண்மை கோட்பாடுகள் கலந்த நாவல் வாங்கினேன்.  இது சில காலம் முன்பு ஆனந்த விகடனில் தமிழாக்கப்பெற்று தொடராக வெளிவந்தது. இதை வாங்கிய சில நாட்களில் படித்தாகிவிட்டது. இன்னும் சில விஷயங்கள் விளங்கவில்லை. மற்றபடி சுவாரஸ்யமான நாவல். தமிழாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் இருப்பவைகளைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்கு தாவு தீர்ந்துவிடும் என்பதால் கூட இருக்கலாம்.  ஆங், சொல்ல மறந்துவிட்டேன், இந்த மார்க்கெட் அருகே பெங்களூர் கோட்டை என்று ஒன்று இருந்தது. அது திப்பு சுல்தான் கோட்டை என்று சொன்னாலும், ஆரம்பத்தில் அது கெம்ப கவுடா என்னும் விஜயநகர பிரதிநிதியால் கட்டப்பெற்றது என்பதும் பின்னால் பிரிட்டிஷார் வயிற்றுக்குள் போகும் முன் வரை ஹைதர் அலி-திப்புவின் கைகளில் இருந்தது என்பதும் விக்கிபீடியாவின் வாக்கு. அந்த கெம்ப கவுடா பெயரில் பெங்களூரில் ஒரு பகுதி கூட இருக்கிறது.



Qutub Minar
மேலே இருக்கும் இரண்டு படங்களும் லால் பாக்கில் எடுத்தது. நல்ல பெரிய பார்க் அது. எக்கசக்க மரங்கள். எங்கள் ஊரில் ஒத்த மரம் நிற்க வக்கில்லை. நகரத்திற்குள் இவ்வளவு பெரிய பார்க் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தமிழகத்தில்.

 எல்லா வேலைகளும் முடித்துக் கிளம்பும் போது எண்ண ஓட்டங்கள் வேறு விதமாக இருந்தது. Introspection. வெளியூர் பயணங்கள் அதை உண்டாக்க வல்லது. பிற ஊர்களில் பயணம் செய்கையில் வெவ்வேறு மக்களைப் பார்க்கையில் எண்ண ஓட்டங்கள் சீராக ஓடுகின்றன; நம்மை சுய மதிப்பீடு செய்கின்றன. எனக்கு, இது எண்ண ஓட்டங்களுக்கான பயிற்சி என்பது போன்ற உணர்வு. இப்படி சென்ற எண்ண ஓட்டங்கள் என் பிரச்சனைகளை அலச உதவியாய் இருந்தது.

இன்னும் ஒரு பதிவு மிச்சம் இருக்கிறது. அதை இரண்டொரு நாட்களில் வெளியிட்டுவிடுகிறேன். சென்னை போனதையும் சேர்த்து எழுதுவதற்குத் தான் சில பயணங்கள் என்று தலைப்பிட்டேன். ஆனால் இதற்கே ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டதால் நிறைய தகவல்கள் மறந்து விட்டன. சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அண்ணா ‘சாலை’ என்று சொல்கிறார்கள். ஆனால் அது, கோச்சடையில் ஆரம்பித்து விரகனூர் சுற்றுச்சாலையை தாண்டும் போலிருக்கிறது.(இவ்வளவு தான் மதுரையின் குறுக்களவு அளவு என்பதனை கொள்க!).  சென்னையில் இரவு நேரத்தில் பேருந்தில் ஏறினால் ஒரு தீர்த்தம் உண்டவரையாவது  (மோந்து) பார்க்காமல் இறங்க மாட்டீர்கள். இந்த இரவு நேரம் என்பது ஏழு மணியிலேயே தொடங்கிவிடுகிறது. நல்ல ஊருய்யா. என்ன தான் இருந்தாலும், நம்ம ஊரோட பிரதிநிதியா நம்மை நினைத்துக் கொண்டு அடுத்த ஊரை கிழிப்பதில் உள்ள சுகமே தனி.

சில பயணங்கள் - 3

Filed under , by Prabhu on 3/03/2010 01:08:00 PM

8

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5

171 பேருந்தே மெஜஸ்டியில் இருந்து கோரமங்களா வரும் வழியில் Dairy Circleல் நிற்கும் என தெரிந்ததால் மெஜஸ்டி சென்று 171 பிடித்து செல்லும் வழியில் பேச்சு என் நண்பனின் பிரதாபங்களைப் பற்றி ஆரம்பித்தது. அவனைப் பற்றி முதலில் சொல்லி விடுகிறேன். மதுரையிலிருந்து பெங்களூர் சென்று மேலாண்மை படிக்கும் மாணவன். சௌராஷ்டிரன். சௌராஷ்ட்ரா என்பது மதுரையில் மிகுந்து இருக்கும் மொழி சார்ந்த பிரிவு என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் பற்றி பின்னாளில் விஸ்தாரமாக பேசுவோம். எப்படி நான் அண்ணன் இருக்கும் தைரியத்தில் செல்கிறேனோ, அதே போல் அக்கா, பவா(சௌராஷ்டாவில் அக்கா கணவர்) இருக்கும் தைரியத்தில் சென்றவன் அவன். எங்கள் ‘கேங்’கில் சின்ன பையன் இவன் என நினைத்தோம். ஆனால் நாங்கள் தான் சின்ன பையன்களாக இருக்கிறோம். அவனுக்கு சென்னை, பெங்களூர் என மாநிலத்துக்கு ஒரு நண்பி உண்டு. மதுரையில் சந்தித்த பெண் சென்னைக்குப் படிக்கப் போக, இவன் பெங்களூர் சென்றால், அங்கே வகுப்பில் படிக்கும் இரண்டாம் தலைமுறை பெங்களூர்வாசியான ஒரு பெண் என வாழ்கிறான். அடுத்த அக்காவை ஹைதராபாத்தில் கட்டிக் கொடுக்கிறார்களாம். ஒன்று ரிசர்வ் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஆசாமிகளுடன் பேசுவதில் கடுப்பு என்னவென்றால், ‘அவ இப்படி சொல்றா? ஏண்டா இப்படி?’ , ‘மாப்ள படத்துக்கு போலாம்னு சொல்றா. என்ன செய்யலாம்?’, என்பது போன்ற வயிற்றெரிச்சலைக் குழல் வைத்து ஊதும் கடமையை செவ்வனே செய்கிறார்கள். இவர்களுக்கு தேவை விடையல்ல. என்ன சொன்னாலும் அப்படியல்ல, இப்படியல்ல என ’மன்மதன்’ சத்யன் போல நம்மை வெறுப்பேற்றுவார்கள். நான் என்னவென்றே புரியாத ஒரு பார்வையை குடுத்துவிட்டு பேச்சை திசை திருப்பிவிடுவேன். அது நமக்கும் நம் நட்புக்கும் நலம்.

Dairy circleல் ஒரு ’நந்தினி’ விற்பனை நிலையம் இருந்தது. நந்தினி என்பது ‘ஆவின்’ போல கர்நாடகா அரசின் பால் கொள்முதல்-விற்பனை நிறுவனம். அந்த நிலையத்தின் பின்னாலேயே நந்தினி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையும் இருந்தது. Dairy Circle பெயரே அதனால் தான் வந்திருக்க வேண்டும். நந்தினியில் ஒரு புட்டி பால் வாங்கிக் குடித்து விட்டுத்தான் மறுவேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நந்தினியைப் பற்றி பேசும் போது ஆவினைப் பற்றி பேசாமல் விட முடியவில்லை. இரண்டுமே மாட்டின் பெயரினைக் கொண்டு அமைந்தவை. ‘ஆவின்’ என்ற பெயரின் அழகை சில ஆண்டுகளுக்கு முன் தான் அறிந்து கொண்டேன். பல நாளாக அதன் பெயரைப் பற்றி யோசிக்காத என் மூளையுள் தற்செயலாக பொறி தட்ட, யோசித்தால் ஆ என்றால் பசு என்று அர்த்தம். எனவே பசுவின் பால் என்பதுதான் ஆவின் பால் என அப்பொழுதுதான் தோன்றியது. ஆவின் பால், நெய், மைசூர்பா என அனைத்திற்கும் நல்ல பெயர் இருக்க, இன்னும் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஆவின். உள்ளே ஊழல் அதிகம் என்று கேள்வி. இப்படி நல்ல விஷயங்கள் இருக்கும் அரசாங்க நிறுவனங்களையும் வீணடிக்கிறார்கள்.

இது வேற நந்தினி

விசாரித்து பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடித்து சென்றேன். உள்ளே பல்வேறு மாநிலத்திலிருந்தும் ஒரு சில வெளிநாடுகளிலிருந்தும் வந்து இருக்கும் பலரைக் காண இயன்றது.  அந்தத் தடவையும் அதன் பிறகு தற்பொழுது இருமுறையும் பெங்களூர் சென்ற பொழுதெல்லாம் ஒவ்வொரு முகத்தையும் காணும் பொழுது மூளை இவள் எந்த மாநிலமாக இருப்பாள், இவன் தமிழனோ என தொடர்ந்து கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மூளைக்கு அயற்சியைக் குடுத்தாலும் பிடிவாதமாகத் தொடர்வதால் எண்ணங்களைத் துண்டிக்கும் முயற்சியில் அவனுடன் பேச ஆரம்பித்தேன். அங்கிருக்கும் ஒருவனைத் தோராயமாகப் ஒரு ஒரியாக்காரனைப் பிடித்து கொஞ்ச நேரம் பேசினோம். எனது பேரைக் கேட்டவன் ’typically tamilian’ என பஞ்சாபியிடம் சொன்னான். சிரித்தாலும் இன்னமும் மூளையில் ஒரு குழப்பமும் வெறுப்பும் இருக்கிறது. கலிங்க நாட்டவனுக்கு இவ்வளவு கொழுப்பா? அமைச்சரே...) அதென்ன 'typically'? (பேரைக் கேட்டாலே ஊகித்துவிடலாம் என்பதுதானா இல்லை எதுவும் இளக்காரமாக சொன்னானா?

பிறகு Forum போக பாஸ் இருக்கும் தினவில் பஸ் ஏறி செல்கையில் நடத்துனரிடம் கேட்டால் போகாது என்றார். பக்கத்திலிருந்தவரின் கன்னடத்தை அறைகுறையாக புரிந்து கொண்டு கார்பரேஷன் நிறுத்தத்தில் இறங்கி விசாரித்து செல்லும் முன் ஒரு பானி பூரி சாப்பிட்டோம். நான் பெங்களூரில் சாப்பிட்ட பானி பூரிகளிலே சிறந்தவை கார்பரேஷன் அருகில் சாப்பிட்டவைதான். அங்கே மிளகாய் பொடியெல்லாம் போட்டுக் கொடுக்கிறார்கள். எட்டு பூரி கொடுக்கிறார்கள் (பல இடங்களில் 6 தான்). முடிந்தபின் பானி இன்றி கிழங்கு, சாட் பொடி மட்டும் போட்டு ஒரு பூரி கொடுக்கிறார்கள். சாப்பிட்ட பின் வெத்தலை போடுவது போல விந்தையான பழக்கமாக பட்டது.

Forum பற்றி அடுத்த பதிவில் பேசுவோம். மிகவும் சிறிய பகுதிகளாகப் போடுகிறேனோ? என்ன செய்வது, பதிவர்கள் பெரியவைகளைப் படிக்க மூக்கால் அழுகிறார்கள். ஒரு 16 பக்க கதை இன்னும் என் பதிவில் சீண்டுவாரில்லாமல் இருக்கிறது. சுவாரஸ்யமா கொண்டு போறேனா என்பது தான் கேள்வி . போகுதா இல்லை அடுத்த பதிவை பெரிதாக எழுதி முடிச்சிடவா?

சில பயணங்கள் - 2

Filed under , by Prabhu on 2/23/2010 11:20:00 AM

10

மடிவாலாவில் இறங்கியதும் ஆட்டோவாலாக்கள் மொய்க்கிறார்கள். எல்லோருக்கும் தமிழ் தெரிகிறது. நீங்கள் அங்கே இறங்கி, ’ஐயா நான் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்றால் கூட புரிந்து கொள்வார்கள். சிறிதே தடுமாறும் தமிழ் பேசவும் செய்கிறார்கள். மீட்டருக்கு மேல் பத்து கேட்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன பொழுது மீட்டரே வேத வாக்கு. சமீப வருடங்களாக சென்னைக் காரர்களைப் பார்த்துக் கற்று கொண்டிருக்கிறார்கள. மீட்டருக்கு மேல் பத்து கேட்டார், ஐந்தைக் கொடுத்து சமாளித்தோம்.

கோரமங்களாவில் என் அண்ணன் வீட்டுக்கு போய் கதவைத் திறக்கவும் ஓடி வந்து எட்டி கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு பின்வாங்கினவள், என் அண்ணன் மகள் சுகிதா. சுகிதா  என்றால் ஒளி கீற்று என்பது போன்ற அர்த்தம் வரும். என்னடா புதுசா வாயில் வராதபடி வச்சிருக்கீங்கன்னு எங்க அத்தை கூட கேட்டாங்க. வாயில் நுழையுற மாதிரி வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் என கவுண்டமணி சொல்வார். பெயர் வைக்கும் போது யாரும் அதிகம் பயன்படித்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு obsession. என் பெயரை சொல்லி அடுத்தவனைக் கூப்பிடும் போது ஏற்படும் அசூயைக் கூட காரணமாக இருக்கலாம்.

அண்ணன் வீட்டிற்குப் போனதும் கடமையாக கொட்டிக் கொண்ட பிறகு குசல விசாரிப்புகளும் குழந்தையுடன் விளையாட்டும் தொடர்ந்தது. சுகிதா துறுதுறுவென வருகிறாள். அவளுக்கு உட்காரத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். உட்கார்ந்து பார்த்ததில்லை, ஒரே ஓட்டம் தான். ஒரு வயது தான் ஆகிறது. அதற்குள் அநியாய அடம். அம்மா, ப்பா என்று எப்பயாவது பாசம் பொங்கும் போது மட்டும் வருகிறது. நான் சொல்லச் சொல்லி சொன்னால் வாயில் விரல் வைத்துக் கொண்டு கேவலமாக நம்மை பார்க்கிறாள், ‘வெட்கமாயில்ல’ என்பது போல். நான் அவளைத் தூக்கி வெளியே வந்த பொழுது, bbaa, bbaa என சத்தம் எழுப்பி கையை அழைத்தாள். அந்த திசையில் பார்த்தால் மாடு. மாடி வீட்டு நாய் ராமு வந்தால் ட்டா,ட்டா என அழைக்கிறாள். காதைப் பிடித்து இழுக்கிறாள். நான் நாய் இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பித்ததே காலேஜ் வந்த பிறகு தான். அதற்கு முன் சித்தப்பா வீட்டிற்குக் கூட சுத்தி தான் செல்வேன், அந்த குட்டி பொமரேனியன் நாய்க்காக.

இப்படிபட்ட சாகச வீராங்கனை பயப்படும் விஷயம் உணவு. ம்ஹூம்.. ஒரு வாய் உண்ணேன் என்கிறாள். அதனாலேயே வத்தலாக இருக்கிறாள். மடியில் போட்டு பாலோ அரைத்த உணவோ கொடுக்கும் முன் நடு விரல் இரண்டை சூப்பிக் கொண்டு வெளியே எடுக்க மாட்டாள். மேஜையில் இருக்கும் பொருளை எல்லாம் சூறையாட அவள் ஓடி வந்தால், ஒரு புட்டி பாலை வைத்து அவளை விரட்டி விடுவேன்.  இந்த தடவை அவளுக்கு டயாபர்  அண்ணன் பெரிதாக வாங்கி விட அவள் டெண்டுல்கர் போல அதை அப்பப்போ அட்ஜெஸ்ட் செய்து கொண்டே ஒரு முழி முழிப்பாளே பார்க்கனும். சிரிப்பாக இருந்தது. அவள் தத்தக்க தத்தக்க என நடந்து விழும் அழகு... வாய்ப்பே இல்லை.

அன்று ட்வீட்டில் நான் பெங்களூர் வந்ததை கேட்காதவர்களுக்கும் கூவி சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் ஊர் சுற்ற வேண்டி இருந்தது. அதிகபட்ச அலம்பல்களுடன் பெங்களூர் வாழ் நண்பன் என்னுடன் வர ஒப்புக் கொண்டான். வேறு எங்கு செல்லத் தெரியாமல் என் நண்பன் கூப்பிட்ட இஸ்கான்(ISKCON) செல்வதற்காக மெஜஸ்டி பேருந்து நிலையத்தில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. போகும் வழியில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைப் மனப்பாடம் செய்யும் முயற்சியில் அயற்சியடைந்து FM கேட்கத் துவங்கினேன். சென்ற முறை போல இந்த முறை நெடுக கன்னடம் கேட்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்தின் நடுவே ஓடி மின்சார ரயில் பிடிப்பவனைப் போல நடுவிலிருந்த கன்னடத்தைத் தாண்டி இந்தி மற்றும் ஆங்கில ஸ்டேஷன்களில் ஓடிக் கொண்டிருந்தேன்.

மெஜஸ்டியில் நண்பனுக்காக காத்திருக்கும் சமயத்தில் இயற்கை ’அன்னை’ ’ஃபோன் போட’, சேலம் பேருந்து நிலையம் நினைவுக்கு வர, தயக்கத்துடன் சென்றால், கழிப்பறை இலவசம். கழிப்பறை சுத்தமாகதான் இருந்தது. பிறகு எங்கிருந்துதான் அப்படி முக்கைத் தட்டிக் குடலை வாய் வழியே வெளியே கூப்பிடும் நாற்றம் வருகிறது எனப் புரியவில்லை. வெளியேறிய சிறிது நேரத்தில் சொன்னபடி ஒன்றாம் நடைமேடையில் சந்தித்தோம். ’இஸ்கான்’ செல்லும் பஸ்ஸைப் பிடித்து நடத்துனரிடம், ‘இஸ்கான் வந்தா சொல்லுங்க’ என தமிழில் சொல்லிவிட்டு ஒரு நாள் சீட்டு வாங்கினான். 32 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினா வோல்வோ பஸ் தவிர எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முழுக்க எங்கு வேணுமென்றாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். ’இங்க தைரியமா தமிழில பேசு. நிறைய பேருக்குத் தெரியும்’, என விளக்கினான். அவனிடம், ‘நீ முதலில் தமிழில் பேசு’ என்றது அவனுக்கு புரியவில்லை. நான் அதன் பிறகு சில பல சமயங்களில் தமிழ்  பேசியிருக்கிறேன். நிறைய புரிந்து கொள்கிறார்கள்.

 இஸ்கானுக்கு இங்கு இறங்கி நடக்கனும் என்று சொன்னதும் இறங்கி நடந்த எங்களுக்கு நீண்ட வரிசையில்லாத இஸ்கானைக் கண்டதும் புத்துணர்வுடன் சென்றால், ‘சூரிய கிரகணத்தின் காரணமாக மாலை வரை இஸ்கான்’ மூடப்பட்டிருக்கும் என்ற பலகை எங்களைப் பார்த்து பல் இளித்தது. சரி Forum போகலாம் என முடிவு செய்த பொழுது, எனக்கு என் வேலை தோன்றியது. போகும் வழியில் ஒரு காலேஜில் இறங்கி எவன் வாயையாவது பிடுங்கிவிட்டு செல்லலாம் என சொல்ல பேருந்து நிறுத்ததிற்கு கிளம்பினோம். எந்த பேருந்தில் வந்தோமோ அதே பேருந்தே கிடைத்தது. போதும், தொடர விடுவோம். அடுத்த பதிவில் எனக்கு பெங்களூர் பற்றித் தெரிந்த கொஞ்ச விஷயங்களை வளவள என்று பேசுவோம்.

சில பயணங்கள்

Filed under , by Prabhu on 2/05/2010 11:58:00 PM

20

சில பயணங்கள் - 1
சில பயணங்கள் - 2
சில பயணங்கள் - 3
சில பயணங்கள் - 4
சில பயணங்கள் - 5
எங்கள் வீட்டில் முடிவு செய்த பொழுது அவர்களுடன் பெங்களூர் போக விருப்பமில்லை. ஆனால், என் அம்மா அப்பாவுக்கு பேத்தியை பார்க்கனும் என பேரார்வம். அவர்கள் முடிவை ஒண்ணும் செய்வதற்கு இல்லை. ஆனால் மூன்று நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது எனற பிரச்சனையும் இல்லையென்றால் சித்தப்பா வீட்டுக்கு சென்று சாப்பிட வேண்டிய கட்டாயத்தின் பயமும் காரணமாக நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்துவிட்டேன். சித்தப்பா வீட்டுக்கு சென்றால் இன்னும் சாப்பிடு என புளிமூட்டை அடைக்கிறாற் போல சாப்பிட வைத்து விடுவார். அத்துடன் அடுத்த வீட்டிற்கு சென்று சாப்பிடும் போது அவர்கள் நேரத்திற்கு நாம் உடன்பட வேண்டும், பசிக்கவில்லையென்றாலும். அதனால் பெங்களூர் சென்று நாலு பெண்களையாவது பார்த்து வரலாம் என கிளம்பிவிட்டேன்.

பொங்கல் அன்று காலை நாலரைக்கே அடித்து எழுப்பி, போய் குளி என விரட்டினார்கள். பயண அவசரம் காரணமாக பொங்கல் குக்கரில் தயாரானது. பொங்கவில்லையென்றாலும் அது பொங்கல் தானா என நான் யோசித்த பொழுது பொங்கல் வந்து விட அந்த எண்ணத்தை உதிர்த்து விட்டு தட்டில் பொங்கலை கொட்டிக் கொண்டேன். அம்மா எனக்காக அளவாகவே சக்கரை கலந்திருந்தாங்க. வரவர ஒரு சில வகை இனிப்புகள் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டால் சரக்கடித்தாற் போல ஒரு மிதப்பு.

ஆரப்பாளயத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினால் சேலம், ஓசூர் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. என் முடிவின் படி ஓசூர் வண்டியில் ஏறி அமர்ந்தோம். பொங்கலன்று பயணம் செய்ய முடிவு செய்த என் அப்பாவின் புத்தி கூர்மையை மெச்சிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் பாதியை நிரப்பக் கூட கூட்டமில்லை. நான் ஒரு மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில் படுத்து திண்டுக்கல் வரை தூங்கிவிட்டேன். திண்டுக்கல்லில் ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்த பொழுது டீ-சர்ட், ஜீன்ஸுடன் 20+ மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். தோளில் இருந்த பையும் ஷூவும் அவன் ஏதோ வெளிநாட்டுக் கம்பெனியில் வேலை செய்கிறார் போலத் தெரிந்தது. போனிலும் அலுவல்களை பேசிக் கொண்டே வந்தான். பெங்களூர் செல்கிறான், ஓசூர் வரை இருப்பான் என கணித்தேன்.

திண்டுக்கல் தாண்டியதும் அகன்ற தேசிய நெடுஞ்சாலையை கண்ட ‘ஆழி அகல் வீதி’ என மதுரையை சங்க இலக்கிய நூல்  விளக்குவாதாக சிறு வயதில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. மதுரை வீதியில் ஒரே நேரத்தில் இரு தேர் அநாயசமாக செல்லுமாம். இப்பொழுது இரு கார் சென்றாலே அந்தத் தெருவில் வாகனங்களின் ஹெட்லைட் கண்கள் முறைத்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் அவ்வளவு அகண்ட சாலைகளைக் காணும் போது ஆச்சரியமே.  Free way, Express way, Autobahn என வெளிநாடு சென்று வந்த நம்மவர்கள் கூறும் சாலைகளுக்கு சிறிதும் குறைந்ததில்லை. சுத்தமாக, சீராக அகலமாக பல லேன்களுடன் இருந்தது. சுங்கச் சாவடிகள் அருகே அதன் பிரம்மாணடம் புரிகிறது. சாவடி அதிகாரிகள் மஞ்சள் சட்டையும் டையுமாக இருந்தனர். தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம் என அப்பா கூறினார்.


அடுத்து வந்த ஊர் கரூர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளைக் காணும் போது அகன்று, கட்டுமான அமைப்புகளும் நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் முக்கிய ஊரான மதுரையில் இப்படி இல்லையே வீதிகள் என ஆதங்கம். கரூரில் எல்லா சாலைகளும் இப்படி இருக்கிறது என்றால் அது நல்ல விஷயம் தான். எனக்குத்தான் புகைச்சல். இதைத் தாண்டி செல்லும்போது மீண்டும் ஒரு சாவடி. ஓட்டுநர் என்னவோ பேசினார், தடுப்பை திறந்துவிட்டார்கள். பின்னர் தெரிந்து கொண்டேன் வாராந்திர பாஸ் வசதி உண்டு. ஒரு தடவைக்கு 50 ரூபாயாம். பெங்களூர் செல்வதற்குள் 5,6 சாவடிகள் பார்த்து விடுவோம். ஒரே வழி, அதிலும் இப்படி அதிக சுங்கம் என்பது அநியாயம்.

அதைத் தாண்டி நாமக்கல் பேருந்து நிலையத்தினுள் நுழைந்த பொழுது அருகில் ஒரு மலையும் அதன் மேல் ஒரு கோட்டைச் சுவரைப் போன்றும் இருந்தது. என்னவென்று கேட்டதற்கு கோட்டைடா என்று விளக்க முற்பட்டார். அம்மா இடைமறித்து, ’சும்மா குழப்பாதீங்க. மேலே ஒரு கோவில் இருக்கிறது’ என்றார். அதைத் தான் சொல்ல வருகிறேன் என்ற அப்பா, ‘அந்த காலத்தில் கீழே போர் புரிந்து கொண்டிருக்கையில் பலவீனமடைந்தால் தப்பி ஓடி உள்ளே ஒளிந்து கொண்டு ‘தற்காப்பு போர்’ செய்வார்கள். வெளியே முற்றுகை நடக்கும். யார் அதிகநாள் தாங்குகிறார்களென்பது போரின் முடிவை நிர்ணயிக்கிறது’ எனறு விளக்கினார். அந்த மாதிரியான அரண்களிலெல்லாம் ஒரு கோவில் இருப்பது வழக்கம் என நான் படித்ததுண்டு. தஞ்சையின் பழைய கோட்டையினுள் இருந்த காளி கோவில் இன்னும் உண்டென கேள்வி. சரியான தகவல் நினைவிலில்லை. தமிழனின் வீரம் பற்றி அதிகம் பேசி நம்மை ஏமாற்றும் அளவு நம் ஊரில் வீரம் இருந்திருக்காது, போர்தந்திரம் தான் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பது திண்ணம். புறநானூற்று வீரமெல்லாம் தமிழ் சினிமாவின் கதாநாயகனின் வீரம் போல்தான் என ஒரு எண்ணம் தோன்றுகிறது.

(சில நாட்கள் ஆனதால் ஞாபகங்கள் தப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த பயணக் கட்டுரை எழுதுவதற்குள் பல தடங்கல்கள். 3 வாரங்கள் ஆகப் போகிறது. நினைவிற்கு வந்ததை இட்டு நிரப்புகிறேன்.)

இவ்வாறு யோசித்துக் கொண்டே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கையில் சேலத்தினுள் நுழைந்தது. முதல் ஆளாக அந்த அந்த டீசர்ட்-ஜீன்ஸ் இளைஞன் இறங்கினான். ஒரு ஆளைப் பார்த்து கணிக்கும் முயற்சியில் அடுத்த தோல்வி. சிறிது நேரம் உண்டு என நடத்துனர் சொன்னதும் கழிப்பறையை தேடத் தொடங்கினேன். பேருந்து புறப்பட்டு விடுமோ என வேகமாக சென்றேன். நுழைய 3 ரூபா கேட்டான். பிஸ்ஸுக்கு இது ரொம்ப அதிகம் தான் என நினைத்துக் கொண்டே கொடுத்து விட்டு போய் வெளியேறும் போது ஒருத்தன் தலைய சொறிந்தான். வெளியே கொடுத்தாகிவிட்டது என்றதற்கு தான் கழுவுபவன் எனக் கூறினான்.  அந்த புண்ணியவானுக்கு ஒரு இரண்டு ரூபாய் அழுதுவிட்டு வந்தேன். இத்தனைக்கும் நடுவில் வந்த விஷயம் ஆகவில்லை என்பது தான் வயிற்றெரிச்சல். வருது ஆன வரலைன்னு போக்கு காட்டிவிட்டு 5 ரூபா நட்டம் தான் மிச்சம். பெங்களூரில் என்னவெல்லாம் வேட்டு வைக்க இருக்கோ. பெங்களூர் செல்லும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.

அடுத்து தர்மபுரியில் ஒருவன் கையில் ஜீன்ஸ் ஜாக்கெட்டுடன் நின்றிருந்தான். இவன் ஏறுவான் என நினைத்தேன். ஓசூரில் மாலை நேரக் குளிருக்கு அது உதவும் என்றெல்லாம் கணக்கு போட அவன் வாளாவிருந்தான். ச்சே, வெத்து வேட்டு என நினைத்துக் கொண்டே க்ரீம் பிஸ்கட் சாப்பிடத் தொடங்கினேன். பக்கத்தில் பாக்கெட்டில் இருந்து தூள் போல ஒன்றை கொட்டி கசக்கிக் கொண்டிருந்தான். புகையிலையோ என்னவோ போல, கணேஷ் போன்ற பிராண்டுகள்(Brands) சொல்வார்களே, அது தான். கான்சரை கையில் கசக்கி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்ததும் என் உதட்டில் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் வந்த குழிப் புண்ணை பார்த்து ’கஞ்சா அடிப்பயா’ எனக் கொடைக்கானலில் கேட்டவன் நினைவிற்கு வந்தான்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் இடத்தருகில் ஒரு பிச்சைக்காரன் ஒரு சிறுவனைக் கிடத்தி சாட்டையால் தரையை அடித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். வருகிறவர்களை கபடி வீரனின் லாவகத்துடன் மடக்கி பிச்சை எடுத்தான். இவனின் வேகத்தைக் கண்டு ரக்பி விளையாட்டைப் போல முட்டித் தூக்கிவிடுவானோ என்று பிச்சை போட்டவர் ஏராளம். இப்படி ஒருத்தனை மடக்கிய பொழுது விரலை ஆட்டி மிரட்டியபடியே ஒருவன் சென்றான். இன்னொருவன் ட்ராஃபிக் போலீசைப் பார்த்த லாவகத்துடன் சுத்தி விலகிச் சென்றான். இத்தனைக்கும் நடுவில் வெயில் சுரீரென உரைக்காமல் அந்தச் சிறுவன் எப்படி உறங்குகின்றான் எனத் தெரியவில்லை.

கடைசி சீட்டில் ஒருவனிடம் சீட்டு கொடுக்க நடத்துனர் சென்றார். அவன் ‘டிக்கட் வச்சிருக்கேன்’ எனக் கூற சொல்ல தகராறாகி விட்டது. பின்னர் தான் தெரிந்தது ஐயா ’உண்மை விளம்பி’யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கிறார் என்றும், இதற்கு முன்பு பயணித்த வண்டியில் சீட்டு வாங்கியிருக்கிறார் என்பதும். முடிவில் அவன் தலையில் ’சொத்’தென அடித்து காசைப் பிடுங்கி சீட்டும் சில்லறையும் கொடுத்தார், நடத்துனர்.

ஓசூரை நெருங்க நெருங்க போகும் வழியிலெல்லாம் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப் பட்டதாகவும் இருந்தது. சாலை நடுவெங்கும் அலங்காரத்திற்கு வளர்க்கப்பட்ட செடிகளின் மேற்பரப்பு வெட்டப்பட்டு சாப்பிடும் மேசை போல அழகாக இருந்தது. சாலையோரங்களில் 'Cafe day' தென்பட ஆரம்பித்தது.

ஓசூர் வந்த பொழுது மாலையாகிவிட்டிருந்தது. இறங்கியதும் ஒரு பஸ் பெங்களுருக்கு கிடைத்தது. ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கிறது. ஒரு கலப்படக் கலாச்சாரத்தை பார்க்க இயலுகிறது. ’மஞ்சநாதா’வில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘அதூர்ஸ்’ ரிலீஸ். பட போஸ்டர்கள் பார்த்த வரையில் ஒன்றிரண்டு தமிழும், மற்ற படி அதிகப்படியாக தெலுங்கு படங்களே ஓடிக்கொண்டிருந்தன. கன்னட படம் மருந்துக்குக் கூட இல்லை. இந்தக் குழப்பம் தீருவதற்குள் கர்நாடக எல்லைக்குள் நுழைந்தது வண்டி.

அங்கே எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹல்லி எல்லாம் தாண்டி மடிவாலாவில் இறங்க வேண்டியிருந்தது.  ஹல்லி என்பது நம் ஊர் பட்டி போன்ற ஒட்டு போல. பொம்மனஹல்லி, பிலஹல்லி, இன்னபிற ஹல்லிகளையும் உள்ளடக்கி இருக்கிறது பெங்களூர். இப்படி இன்னபிற பகுதிகளை கடந்து மடிவாலாவில் பெங்களூர் மண்ணில் கால் வைத்த பொழுது மதுரை மைந்தர்கள் சென்னையில் வழக்கமாக இறங்கும் போது ஏற்படும் அதிர்வு ஏற்படாததால் ஏமாற்றம். இந்த ஊரில் ரவுடிகள் இல்லை போலும்.
 - பயணங்கள் தொடர்ந்தது. இது?
----------------------------------------------------------------------------------------------------------------------
இதை எழுதவே பல வாரமாகிவிட்டது. இதற்கு மேல் பெங்களூரில் நடந்தது, பிறகு சென்னை சென்றது, மீண்டும் பெங்களுரில் நடந்த சந்தோஷத் தருணங்கள் எல்லாம் இதற்கு வரும் கருத்துக்களைப் பொறுத்து எனக் கூறி வரவேற்பு பெற நான் இளைஞர்களுக்கான எழுத்தாளனா இல்லை பிரபல பதிவரா? இருந்தாலும், நீங்க எவ்வளவு வேகமா கருத்துரைகள் இடுகிறீர்களோ அவ்வளவு வேகமாக அடுத்த பதிவை இது போல் வளவளக்காமலும் இதில் உள்ள ஆயிரக்கணக்கான குறைகளை நூற்றுக்கணக்காக குறைத்தும் வெளியிட உறுதியளிக்கிறேன்.