நொடிப் பொழுதில்... (வெர்ஷன் V1.5)
Filed under சிறுகதை , நச்னு ஒரு கதை போட்டி , by Prabhu on 9/30/2009 02:06:00 PM
32
அன்றைய பொழுதின் கடைசி வகுப்பு முடிவதற்கு சிறிது நேரமிருக்கையில் பின் வரிசையிலிருந்து இளையராஜாவின், 'மேகம் கருக்குது..' முணுமுணுப்பு கேட்டது. அவன் அமைதியான வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு பாட்டுகளை முணுமுணுப்பது முன்னிருக்கும் இரண்டு வரிசைகளில் மிகப் பிரபலம்.மழையை பார்த்த பிறகு பேராசிரியருக்கே நடத்த விருப்பமில்லாமல் ஏதோ இடது பக்க முன்னிருக்கை மாணவனிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் கூறிய நகைச்சுவைதான்; முதல் வரிசைக்காரர்கள் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இரண்டாவது மூன்றாவது வரிசைக்காரர்கள் அவர்களுக்குள்ளாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நமக்கே ஒரு பொண்ணு சிக்காத சமயத்தில் இந்த வழுக்குப் பாறைக்கு எப்படி எம்.எஸ்.ஸி பொண்ணு சிக்கியது என்ற குழாயடி கதைகளாக இருக்கலாம். கன்னத்தில் கை வைத்து மழையை வேடிக்கை பார்த்த எனக்கு நிகழுலகத்தை விட கடந்த காலம் இனிக்க டைம் மிஷினை தட்டி விட்டது மூளை.
அதுவும் ஒரு மழை நாள் தான். இதே கல்லூரியில், ஒரு வருடம் முன்பு தான் அவளைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். கல்லூரியின் நீண்ட ஸ்டிரைக்கிற்கு இரண்டு நாள் முன் என்று நினைவடுக்குகளில் பதிந்திருகிறது. எங்கள் கல்லூரியில் கடந்த நூற்றாண்டின் எச்சமாக ஒரு மூடப்பட்ட கிணறு உண்டு. அதனருகில் வைத்துதான் அவளை முதலில் பார்த்தேன். விதியோ சதியோ அதன் பிறகு வந்த இரண்டு நாட்களும் அவளை அதிகமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள் என்னைக் கடந்து செல்லுகையில் நான் பார்த்த ஒருத்தி மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதை உணர்ந்தது அன்றுதான். அவளின் சாயல்... அந்த நினைப்பே எனக்கு ரத்தம் உறைய வைப்பதாக இருந்தது.
பிறகு ஸ்டிரைக் வந்து நான் ரத்த உறைய அடி வாங்கியதும், கல்லூரி தனது வரலாற்றில் மிகப்பெரிய ஸ்டிரைக்கிலிருந்ததும் வரலாறு. பிறகு நான் அவளை ஒரு மாதமாக கல்லூரியில் அவளைக் காணவில்லை. பின் எதிர்பாராத ஒரு நாள் கல்லூரி சிற்றாலயத்தின் வாசலில் வைத்து பார்த்த உடன் என் நுரையீரலில் காற்றை நிரப்பி அட்ரெனலின் நடத்திய விளையாட்டை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமென்று தோன்றிய நாட்கள். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இன்னொரு முகமும் வந்து என் மனதை பிசைவதையும் தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை இவளை எனக்கு முதல் பார்வையில் ஈர்த்தும் கூட இவளுள் நான் கண்ட அவளே காரணமாக இருக்கலாம்.
இது என் பார்வையின் கோளாறாக இருக்க வேண்டும். இல்லையெனில் உண்மையாக இருவருக்கும் ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சராசரி உயரத்திற்கு கம்மி. ஆனால் அதை நாம் கவனிக்க இயலாத அளவிற்கு அழகு. பார்த்தவுடன் அதிர வைக்கும் அழகு இல்லையானாலும் கடக்கும் போது கவனிக்கத் தவறாத முக அழகு. எளிமையான உடையே அணியும் வழக்கம். ஆனால் ஒரு கல்லூரி விழா இரவில் வெள்ளை உடையில் இருட்டின் நடுவே மெல்ல மெழுகுவர்த்தியுடன் அவள் வந்த பொழுது பாரதிராஜா, மணி ரத்னம் படங்களில் வரும் கதாநாயகி போல் தேவதையாக தெரிந்தாள். இன்னும் அதை நினைக்கையில் எனக்கு ஒருவித மயக்கமே வருகிறது.
இவளை பார்த்த உடனே எனக்கு எதுவும் அதே மயக்கத்தில் பொங்கி வழிந்துவிடவில்லை. ஆனால் ஒரு மாதம் பிறகு பார்த்த உடன் ஏற்பட்ட சந்தோஷம்தான் எனக்கு அவளின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அவள் பெயர் அனு என பின்னர் அவள் சீனியர் கூற அறிந்து கொண்டேன்கடவுள் ஒரு மோசமான செக்ரட்டரியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அதிக அளவில் சந்திப்புகளை ஏற்படுத்தியவர், அவை தேவைப்படும் சமயத்தில் சந்திப்பதற்கு எப்படியெல்லாம் தடை ஏற்பட வேண்டுமோ அதை சரியாக செய்வார். ஒரு நாள் மழைக்கு அவள் நான் இருந்த ஜேம்ஸ் ஹாலிலேயே ஒதுங்கினாள். நான் அவளைப் பார்ப்பது அவளுக்கு தெரிந்துதான் இருக்க வேண்டும். என்னை பார்த்ததும் அவள் வேகம் குறைந்தது. பிரபு பின்னால் இருந்து சுரண்டினான். எனக்கு அது தேவைப்பட வில்லை. நேராக சென்று கேட்டேவிட்டேன், "நீ அனு தான?"
-------------------------------------------------------------------------------------------------
இப்பொழுது மழையின் தீவிரம் சற்றே குறைந்திருந்தது. எங்கள் வகுப்பின் 'பின்'னணி பாடகர்களின் ரஹ்மானின் 'மர்லின் மன்றோ', பாடலில் இப்பொழுது பாதி வகுப்பு கலந்திருந்தது. நான் பேண்ட் பைகளுக்குள் கைகளை நுழைந்துக் கொண்டு மெல்ல நடக்கையில் பிரபுவும் சேர்ந்து கொண்டான். மீண்டும் மழை அதிகரிக்கவே நாங்கள் கேண்டினுள் ஒதுங்க வேண்டியதாயிற்று. மழையின் பொழுது காபி குடிப்பது எனக்கு பிடிக்குமென தெரியுமென்பதால் பிரபு காபி வாங்கினான். கையிலிருந்த காபியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.
ப்ரியாவுக்கும் ஆவி பறக்க காபி குடிப்பது பிடிக்கும். எனக்கு சூடென்றாலே ஆகாது. ஆனால் அவளுக்கோ எதுவானாலும் சூடு குறையக் கூடாது. காபியாக இருந்தாலும் செய்யவேண்டிய காரியமாக இருந்தாலும். என்னை விட ஒரு வயது இளையவள். ஆனால் பெயர் சொல்லித்தான் அழைப்பாள்; ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். நான் அவளை கிண்டல் செய்யும் பொழுது தலையை ஒரு பக்கமாக சாய்த்து புருவங்களை உயர்த்தி என்னை நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் அவளை நான் இன்னும் மறந்தபாடில்லை.
இவள் மறக்கக்கூடிய முகமா என்ன? அனுவைக் காணும் போது எனக்கு தோணுவதை சொன்னால் என்ன நினைப்பாள் எனத் தெரியவில்லை. உன்னைப் பார்த்தால் இன்னொருவள் நினைவிற்கு வருகிறாள், அதனால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்றால் எந்தப் பெண்ணுக்கும் பிடிக்குமா? இவள் எனக்கு ஜூனியர் என்ற போதிலும் என் பெயரை சொல்லிதான் அழைக்கிறாள். எவ்வளவு பெரிய ஜோக் என்றாலும் முதலில் புருவம் சுருக்கி பின்பு நிதானமாக உதடுகளை பிரித்து சிரிக்கும் அழகிற்கு...ம்ம்ம்.... மேலெதுவும் சொல்வதற்கில்லை. அனுவேஒரு நாள் அவளது எண்ணை கொடுத்தாள். இப்பொழுது கைபேசியில் தொடர்கிறது.
கைபேசி அப்பொழுதுதான் வாங்கியிருந்தேன். ஒரே பேருந்தில் ப்ரியாவும் நானும் வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து ஒரே கல்லூரிக்கு செல்லும்போது பொழுதுபோகாமல் விளையாட்டுக்கு அவள் என்னை திட்டி அனுப்பும் குறுஞ் செய்திகள் வந்து சேரும் சத்தத்திற்கு காத்திருந்த காலங்களின் சுவடுகள் கூட இன்னும் காயவில்லை. என் தலை முடியுள் உழுத அவள் விரல்களின் ஸ்ப்ரிசம் தீர வில்லை. அவள் வாசமா இல்லை அவள் போட்டுக் கொண்ட பவுடர் வாசமா என என்னால் கண்டறியப்படாத வாசம் இன்னும் நாசிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
நாசியை நிரப்பும் காபியின் மணம் அமைத்துக் கொடுத்த எண்ண வெளியில் உலவிக் கொண்டிருந்த நான், பிரபு முழங்கை முதுகில் இடிக்க விழித்தேன். காற்றுடன் கலந்த புயல் மழையாதலால் குடையினால் சமாளிக்க முடியாமல் முகத்தில் தெறிக்கும் துளிகளுக்கு சிறிது எரிச்சலுடன் சுருக்கிய முகத்தை பதிலாக அளித்து உள்ளே வந்தவள் அனு. உள்ளே வந்தவள் குடையினை மடக்கும் வேளையில் என்னைப் பார்த்தவுடன் அவள் முகச் சுருக்கங்கள் ஒரே ஒரு வினாடி விரிந்து தனது ஆச்சரியத்தைத் தெரிவித்துவிட்டு திரும்பின. சைகை செய்தேன், 'காபி வேணுமா?'. உதட்டை சுழித்து வேண்டாமென்றாள். நல்ல வேளை கேட்கவில்லை; நான் ஏற்கனவே அதை குடித்து விட்டேன்.
அவள் குடுத்த பவண்டோவைக் குடித்து முடித்த நான் அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, பார்ட்டி என்னது, பரிசுதான் உன்னது என்றாள். சரி, பரிசுதான் என்ன வேண்டுமென்று கேட்டதற்கு, ஒரு நல்ல பரிசை யோசித்து தர துப்பில்லையா என்றாள். அப்ப, பத்தோடு பதினொன்னாக ஒரு பரிசளிக்காமல், ஏதாவது ஸ்பெஷலாக கொடு என்றாள். சிறிது யோசித்த நான் முதலில் தயங்கிய நான் பிறகு எழுந்து அவளருகில் சென்று அவள் நாடியை பிடித்து கன்னத்தில் முத்தமிட்டேன். அவளோ சிரித்துக் கொண்டே, இதை அப்பா குடுத்துவிட்டார், நீ என்ன கொடுக்கப் போகிறாயெனக் கேட்டாள். எனது பட்ஜெட்டுக்கு இதுதான் குடுக்க முடியும் என்றதற்கு பெரிய கஞ்சனடா நீ என்றாள். 'நல்ல வேளை நிறைய பரிசுன்னு சொல்லிருந்தா பட்ஜெட்ட காரணம் காட்டி என் கன்னத்தில மழை பெய்ஞ்ச மாதிரி ஆக்கியிருப்ப ',என சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.
மழை கிட்டத்தட்ட நின்றுவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்ட அவள் குடையுடன் கிளம்பினாள். பின்னாலிருந்த பிரபு என்னையும் அனுப்பி வைத்தான். இன்றாவது சொல்லிவிடு மனதிலிருப்பதை என்று. அவளுடனே சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்தேன்.வாயிலைத் தொடுவதற்குள் மீண்டும் மழை பிடிக்க ஒரு மரத்தடியில் ஒதுங்க வேண்டியதாயிற்று. ஆனால் அந்த மரத்திலோ அம்மா ரவை சலிக்கும் உபகரணம் போல ஆயிரம் ஓட்டைகள், குடைக்குள் மழை. அவள் என்னைப் பார்த்த பார்வை அடுத்து அவள் குடைக்குள் அழைப்பாள் எனத் தோன்றியது. அழைத்தாலும் போக மனமில்லை. அழைக்கவும் செய்தாள். மெல்ல அருகில் சென்றவன், "ரொம்ப நாளா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்னு இருந்தேன். தப்பா நினச்சுக்கக் கூடாது?" என்றேன். தயக்கமாக ,"சொல்லு" என்றாள். ஆனால் அவள் உதட்டோரப் புன்னகையை என்னால் படிக்க முடிந்தது. "எனக்கு தங்கச்சி ஒருத்தி இருந்தா உன்ன மாதிரி...", எனத் தொடங்கும் போதே அவள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமா, இல்லை இவனைப் போல் கேனையன் உண்டா என கேட்கிறதா எனப் புரியாமல் நிறுத்திக் கொண்டு அந்த மழையில் விடு விடுவென நடக்க்த் தொடங்கினேன்.
Moral 1 - நான் ரொம்ப நல்லவன்
Moral 2 - நொடிப் பொழுதில் வாழ்க்கை மாறும் போது நாம ஏன் நிமிஷத்த நம்பனும்.... டொகொமோ... டொகொமோ.. டொ கொ மோஓஓஓஒ.....
பின் குறிப்பு - எனக்கு தங்கச்சியே கிடையாது
டிஸ்கி - எப்படி ஓ ஹென்றி மாதிரி நச்சுன்னு ஒரு ட்விஸ்ட வச்சோமா? சர்வேசன் ஒரு போட்டி வச்சிருக்காராம். முடிவுல O'Henry கணக்கா நச்சுனு ஒரு முடிவு வச்சு எழுதனுமாம். இது ஓக்கேவா.... இல்ல இன்னொன்னு நச் நச்சுனு எழுதிடுவோமா?