நேற்றைய நினைவுகள்....

Filed under , by Prabhu on 10/22/2009 11:33:00 AM

16

நேற்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தேன், வேறு வழியில்லாத காரணத்தால். நான்  படிக்க பயன்படுத்தும் மேஜை ஜன்னலின் அடியில் இருக்கும். காலையில் வெயிலும், இரவில் காற்றும்(இருந்தால்...) வர வசதியாக அந்த அமைப்பு எனக் கூறினாலும் எனது வித்தியாசமான பழக்கத்திற்காக அப்படி அமைத்திருந்தேன் என் அறையை. படிக்கும் போது சோர்வடைந்தால் கால்களை மேஜைக்கடியில் நன்றாக நீட்டி, நாற்காலியில் உடம்பை சரித்துக் கொண்டு, கழுத்தை நாற்காலி முதுகின் விளிம்பில் முட்டு கொடுத்து மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருப்பேன். அஜய் அப்ப செல்லில் அழைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டால், விட்டத்த(விட்டத இல்ல) பாத்துட்டிருக்கேன்னு சொல்வேன். அவனுக்கு புரியும். அப்படிஓய்வாக உட்கார்ந்து நம் எண்ணங்கள் எங்கெங்கல்லாம் ஓடுதுன்னு பார்கிற சுகம் இருக்கே....ஹும்.... வார்த்தை இல்லை. கொஞ்ச நேரத்தில மூளை ரிசார்ஜ் ஆகி நேரமானதை உணர்த்தும் போது நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன்.

நேற்றும் அவ்வாறே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கையில் நான் சன்னலிற்கு சிறிது மேலே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாலும், பார்வையின் எல்லைக்குள் இருந்தாலும், அது என் பார்வை குவியிலின் வெளியே (Out of focus) இருந்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தான் கண்ணில் தட்டுபட்டது. கறுப்பாக நார் போன்ற இரண்டு நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் முகத்தின் அடியில் நம்பியார் போல் சிவப்பு விளக்கு எரியாத குறைதான். நான் சொன்னதில் இருந்து அது கரப்பான் பூச்சி எனக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் 'யார் மனசுல யாரு' நடத்த போகலாம். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் எங்க வீட்டுல கரப்பானை 'மிளகா பூச்சி'னு கூட சொல்லுவாங்க. பார்க்க மிளகாய் போல இருப்பதால் இருக்கலாம்.

அதை அடிக்க விளக்குமாறை எடுக்க கிளம்பிய பொழுது மதன் கூறியது நினைவுக்கு வந்தது, கரப்பான் பூச்சி தான் பயப்படும் உயிராகவும், அதுவும் பறக்கும் வகை என்றால் துண்டை தூக்கிக் கொண்டு கத்தி சுற்ற வைத்து விடும் என கூறியி்ருக்கிறார். விளக்குமாறை எடுத்து அடிக்குமுன் எந்த கோணத்தில் அடிக்கலாம் என கோணம் பார்த்த பொழுது கூட அந்த பூச்சி அசையவில்லை. என்ன நெஞ்சழுத்தம்! அடித்து துவம்சம் செய்து வெளியே தூக்கி எறிய முடிவு செய்தேன்.

அடித்த பொழுது சனியன் எப்படியோ தப்பியது மட்டுமல்லாமல் பறந்து வேற காட்டியது. அது சரி, அணு குண்டு போட்டாலும் தப்பி பிழைத்து மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளும் இனமாச்சே! கணிணி மேஜைக்கடியில் இருக்கமென சென்றால் யுபிஎஸ் அடியிலிருந்து வெளியேறி வித்தை காட்டி விட்டு தப்பித்தது. ஒரு வழியாக அதை ஒரு முட்டு சந்தில் மடக்கி அடித்துவிட்டு அதை அவ்விடமிருந்து அகற்றும் பொழுது ஜங்கென்று குதித்து ஓடியது. கொலை வெறியோடு மேலும் மூணு போட்டதில் ஒரு கால் பிய்ந்து விழுந்தது. அப்படியும் ஆட்டம் குறைய வில்லை. அது ஒரு உண்மையான survivalist. தலையை எடுத்தாலும் முண்டமாக 13 நாள் வாழும். இதற்கு மேலும் 20 அடி தேவைப் பட்டது அதன் கதையை முடிக்க. கடந்த 25 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் தானாம். ஒரு முழுமையான உயிரினமாக இருக்கும் போல. பரிமாண வளர்ச்சி தேவைப்படவில்லையே! அடித்து கொன்று வெளியே தூக்கி எரியும் போது ஏனோ சம்பந்தம் இல்லாமல் 'உன்னைப் போல் ஒருவன்' நினைவுக்கு வந்தது :).


பிறகு அஜய் வர, 'முருகா மன்னச்சிடு செய்யப் போற இந்தக் கொலைக்கு', என கூறிவிட்டு சிக்கன் க்ரில் சாப்பிட கிளம்பினேன்.  நேற்று சஷ்டி.

Comments Posted (16)

//நேற்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தேன்//

முதல் வரியே சரியான காமெடி..

டேய் நீ கரப்பன் பூச்சி அடிச்ச கதையை ஒரு பதிவுன்னு உக்கார்ந்து எழுதி போட்டு இருக்க பாரு..உன்ன என்ன பண்ணுறது..:)

ஏன் பேசமாட்டீங்க! ஒரு மேலாண்மை மாணவனப் பாத்து என்ன வார்த்தை பேசிட்டீங்க!

//நான் படிக்க பயன்படுத்தும் மேஜை ஜன்னலின் அடியில் இருக்கும். //

அப்ப தானே சைட்டு அடிக்கிறதுக்கு வசதியா இருக்கும்...அதை சொல்லமா வேற இன்னமோ கதை எல்லாம் சொல்லி இருக்க..

உன்னோட வீரத்தை நினைச்சு உடம்பெல்லாம் மிளகாய் பூச்சி ஊறுற மாதிரி இருக்கு பப்பு :)

அடேய்.. விட்டா கொசு அடிச்சதுக்கு எல்லாம் பதிவு போடுவிங்க போல இருக்கு? சரி சரி.. கொஞ்சம் இரு ரொம்ப நேரமா ஒரு எறும்பு அங்கயும் இங்கயும் ஓடி விளையாட்டு காட்டிகிட்டு இருக்கு.. அதை தீர்த்து கட்டிட்டு.. அப்படியே பதிவுல என்ட்ரி போட்டுட்டு வரேன்..

//கடந்த 25 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் தானாம். //

சுறாமீனையும் சேர்த்து கொள்ளலாம்!

மதுரையின் மானம் காத்த மகா வீரனையா நீர்..

//முருகா மன்னச்சிடு செய்யப் போற இந்தக் கொலைக்கு', என கூறிவிட்டு சிக்கன் க்ரில் சாப்பிட கிளம்பினேன். நேற்று சஷ்டி. /

கடைசி வரிகளில் பப்பு டச்..

அப்படிஓய்வாக உட்கார்ந்து நம் எண்ணங்கள் எங்கெங்கல்லாம் ஓடுதுன்னு பார்கிற சுகம் இருக்கே....ஹும்.... வார்த்தை இல்லை. கொஞ்ச நேரத்தில மூளை ரிசார்ஜ் ஆகி நேரமானதை உணர்த்தும் போது நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன். //

அப்படி உக்காந்தா எனக்கு படிக்க தோணாது. ஏதாவது கிறுக்க தோணும்.

நீங்க HIT விளம்பரம் பார்க்கலையா... எதுக்கு இப்படி குரு சிஷ்யன் ரஜினி மாதிரி வித்தை காட்டுறீங்க. :D

அறிவியலுக்கும்.. அமைதிக்குமான.. நோபல் பரிசுகள்... பப்புவுக்கு வழங்கப் படுகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிராக்... கிராக்...!!!

புல்லரிக்குதையா உங்க வீரத்தைப் பாத்து. எப்படி உங்களால மட்டும் முடியுது?

//பரிமாண வளர்ச்சி //
பரிணாம வளர்ச்சி என்பதே சரி.
//தூக்கி எரியும் போது//
எறியும் போது.

எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாமே பாஸ்.
(பப்பு:மொத கமெண்ட்டே குறை சொல்லிப் போட்றாம் பாரு)

சும்மா பூச்சி அடிச்ச விஷயமென்றாலும் சில தகவல்களை சாமர்த்தியமாக இணைத்துவிட்டீர்கள்.
welldone!

@ஆதவன்
புல்லரிப்பா? சொறிஞ்சுக்கோங்க!

@கிஷோர்
போடுங்க. யாரோட வீரம் சிறந்ததுன்னு பாத்துருவம்.

@வால்ஸ்
சுறாவா? கேள்விபடலை. 'என்'ஸைக்ளோபீடியாவில் சேத்துக்குறேன்.

@கார்த்தி.பாண்டியன்
நம்மள மாதிரி நாலு பேரு மதுர மண்ண காப்பாத்துறதுக்கு வேணுமில்ல!

@விக்னேஷ்வரி
நான் படிக்கும் போதே கிறுக்கும் பழக்கம். தனி நேரம் அவசியப் படாது!

@பாலா
உங்க பரிந்துரை புரியுது. ஒபாமாலா வாங்கும் போது, நமக்கென்ன குறைச்சல்? ஆனா அந்த 'கிராக்' புரியலையே?

@சுபாங்கன்
அதெல்லாம் பிறப்புலயே வர்றதுங்க. :)

@ஸ்ரீ
நானே நாலு பேருகிட்ட போய் ரவுசு குடுப்பேன். நீங்க என் பதிவுல எல்லார் முன்னாடியும் வச்சு பப்ளிகுட்டி பண்ணிட்டீங்களே! அதுவு ஹாலி பாலாவ ஒட்டிட்டு வந்திருக்கேன், இப்பவா?.பரிட்சை வரும் காலத்தில் திருடிய தருணங்களில் எழுதியதால், பிழைகளை கவனிக்க நேரமில்லாமல் போய்விட்டது. (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?).

@வேல்ஜி
நன்றி!

ஹாஹா. கல்க்கல். :)

மனுசந்தான் மனுசனை கெடுக்கிறான், வேறெந்த உயிரினமாவது இப்படி செய்கிறதா, என்று கேட்பவர்களே, இதோ பாருங்கள், ஒரு கரப்பான்பூச்சியை இன்னொரு............

(கோவிச்ச்சுக்காதீங்க பாஸ், உங்க போட்டோவை பார்த்துதான் இந்த கமெண்ட்.)

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!